அரசியலில் பெண்கள் மாற்றத்தை ஏற்படுத்த கட்சி செயற்பாட்டில் ஈடுபடவேண்டும் – யாழ்மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்

அரசியலில் பெண்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அரசியல் கட்சியில் இணைந்து கட்சி செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும் என யாழ்மாவட்ட உதவிதேர்தல் ஆணையாளர் அமல்றாச் தெரிவித்தார்.
யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் சேர்ச் போ கொமன் கிரவுண் அமைப்பும் இணைந்து இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் பெண்தலைவர்களின் பங்கை வலுப்படுத்தல் என்னும் தொனிப்பொருளிலான சுமார் மூன்றுவருட திட்டத்தின் தொடர்பான வளவாளர்கள், உள்ளூராட்சி மன்ற பெண்பிரதிநிதிகள் திணைக்கள தலைவர்களுடனான சந்திப்பு ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
குறித்த செயல்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்கள் 25 வீதம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டது அல்லது கட்டாயமாக்கப்பட்டது காரணம் பெண்கள் அரசியலில் பங்குபற்றவேண்டும் என்பதே அதன் நோக்கமாகும் இது பல்வேறு நாடுகளிலும் பிரயோகிக்கப்பட்ட விடயம் ஆகும். இந்த சட்டம் பல வாதபிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதாகும். இன்று வெற்றிகரமாக ஒரு பதவிகாலத்தை உள்ளூராட்சி சபைகள் நிறைவு செய்து அதற்கு மேலதிகமாக ஒரு வருட கால நீடிப்பு காலத்திலும் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு இந்த பெண்களுக்கு கிடைத்துள்ளது.
இத்தகைய கால கட்டத்துக்குள் தேர்வு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகள் தங்களுடைய அர்ப்பணிப்பு மிக்க செயல்களால் சமுகத்தின் தேவைப்பாடுகளை அடையாளப்படுத்துபவர்களாக மாறியுள்ளார்கள்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கு 25 வீதம் என உள்வாங்கப்பட்டிருந்தாலும் சட்ட ஏற்பாடுகளின் பொருள் காரணமாக எங்களால் 25 வீதத்தை பூரணப்படுத்த முடியவில்லை இது எல்லோருக்கும் தெரியும் யாழ் மாவட்டத்தில்22.89 வீதமே பெண்கள் உள்வாங்கப்பட்டிருந்தார்கள். தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடிவடைந்து வருகிறது. நாங்கள் தேர்தல் செயற்பாடுகளுக்கான வேலைத்திட்டங்களில் செயலாற்றிவருகின்றோம் . கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது பல அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பு மனுக்களை கடசி நேரம் வரை சமர்ப்பிக்க முடியாதவர்களாக இருந்துள்ளார்கள் பெண் பிரதிநிதிகளுடைய தேவைப்பாட்டை பூர்த்தி செய்ய முடியாதமையால்
ஆனால் இனிவரும் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பெரும் இடரை சந்திக்கப் போகிறார்கள் காரணம் யாரை தவிர்பது என்று தெரியாது தவிக்கப்போகிறார்கள். கடந்த தேர்தலில் பெண்கள் வட்டாரத்தில் போட்டியிடுவதற்கு குறைவாகவே இருந்தார்கள் அரசியலில் ஈடுபாடு மிக குறைந்தளவிலே காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் பெண்பிரதிநிதிகள் அரசியல் கட்சி ஒன்றில் அங்கத்தவர்களாக உள்ளார்கள் ஆரம்பத்தில் பெண்கள் கூறிய விடயம் அரசியல்கட்சிகள் எம்மை உள்வாங்குவதில்லை என்று ஆனால் பெண்கள் எதாவது ஒரு கொள்கையில் ஈடுபட்டு கட்சியில் செயற்பாட்டாளர்களாக மாறவேண்டும் அவ்வாறே மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் தங்களுடைய நோக்கம் என்ன மக்கள் தங்களை தெரிவு செய்து அனுப்புவதன் நோக்கம் என்ன என்பதை மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி மன்றம் என்பது இலங்கையின் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. 1865 ஆம் ஆண்டு மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது அதற்குப் பின்னரே ஏனைய தோற்றப் பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டது உள்ளூராட்சி மன்றங்களுடைய நோக்கம் மக்களுடைய அடிப்படை தேவைப்பாடுகள் அவர்களுடைய களத்தில் இருந்து அவர்களாலே தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாகும் இதற்காகவே உள்ளூராட்சி மன்றங்களில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை ஆனால் பாராளுமன்றத்தில் தான் அவை இருக்கிறது.
எனவே உள்ளூராட்சி அமைப்பு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதே அதன் நோக்கமாகும். அதனை நிறைவுசெய்வது ஒவ்வோரு உறுப்பினர்களுடைய கடமையாகும் என்றார்.