பூதாகரமாகவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – பச்சைக்கொடி காட்டிய ரணில்!

பூதாகரமாகவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – பச்சைக்கொடி காட்டிய ரணில்!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச செஞ்சிலுவை குழுவின் பணியை மீண்டும் இலங்கையில் விஸ்தரிப்பதற்கான பச்சைக் கொடியை காண்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இழுபடும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுடன் நடுநிலைத் தரப்பாக நேரடியாக ஊடாடி விடயங்களைக் கையாள்வதற்கென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவையைப் பெறுவதற்கு அரசின் உயர்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் போர்முனையில் செயற்பட்ட நடுநிலைத் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடுகளை மீளவும் இலங்கையில் விரிவுபடுத்த அனுமதி வழங்கி, அதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவை மேற்கொள்ள சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

இலங்கையில் காணாமல்போனோர் விவகாரம் தற்போது வரை பெரும் பூதாகரமாகவே இருக்கும் நிலையில், அதனை சர்வதேச ஒத்துழைப்புடன் மட்டுமே ஒரு தீர்வை நோக்கி முன்கொண்டு செல்ல முடியும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை இந்த விடயம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகளிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் பாரிய மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

அதுமட்டுமன்றி ரணில் அரசாங்கத்துடன் தமிழ்க் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது மிகவும் இறுக்கமான விடயமாக அதனை முன்கொண்டு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This