சர்வதேச ரோட்டரி கழகத்தின் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழு இலங்கைக்கு விஜயம்

சர்வதேச ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜெனீஃபர் ஜோன்ஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவின் சென்னை நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.128 விமானத்தின் ஊடாக ஞாயிற்றுக்கிழமை (11) குறித்த தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது.
210 உலக நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்ற சர்வதேச ரோட்டரி கழகத்திற்கு , ஐக்கிய நாடுகள் சபையில் ஆசனமொன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜெனீஃபர் ஜோன்ஸின் இலங்கை விஜயத்தை நினைவு கூரும் வகையில் முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது.
இவ்விஜயத்தின் போது ஜெனீஃபர் ஜோன்ஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினரால் 10 இலட்சம் டொலர் பெறுமதியுடைய மருந்து தொகை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.
அத்தோடு 500 இலங்கை மாணவர்களுக்கு பிலிப்பைன்ஸில் தகவல் தொழிநுட்ப கற்கை நெறிக்காக பல்கலைக்கழகங்களில் இணைவதற்கான புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச தலைவர்களையும் , தொழிற்துறையினரையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.