வடக்கு மாகாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

வெப்பநிலை குறைந்து குளிரான நிலை காணப்படுவதால் வடக்கு மாகாண மக்கள் அவதானமாக செயல்படுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் ஏன் என்றால் தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக எமது நாட்டிலும் குளிர் அதிகளவில் காணப்படுகின்றது.
நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வெப்பநிலை 18 செல்சியஸ் ஆக குறைவடைந்து சென்றுள்ளதனால் பல மாடுகள் உயிரிழந்துள்ளன. இந்த காலத்தில் மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
குறிப்பாக இந்த காலநிலைமாற்றத்துடன் வளி மண்டலம் மாசடைந்த நிலைமை காணப்படுகின்றது. நேற்று முன்தினம் சற்று அபாய நிலையினை அடைந்து நேற்று குறைந்திருந்து.இன்று மீண்டும் அதிகரித்துள்ள நிலை காணப்படுகின்றது.
எனினும் இந்த டிசம்பர் மாதம் என்பதால் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.குறிப்பாக இந்த காலத்தில் வெளியில் செல்வோர் கூடுதல் கவனம் எடுத்தல் நல்லது.
பெரியோர்கள்,சிறுவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்வது மிகவும் நல்லது. இதய நோய் உள்ளவர்களும் இந்த விடயத்தில் அவதானமாக செயற்பட வேண்டும் நேற்று வடக்கு மாகாணத்தில் பல கால்நடைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது அவர்களுக்குரிய உணவு பிரச்சினையே அந்த உயிரிழப்புக்கு பிரதான காரணம் அதிகளவில் எமது பிரதேசத்தில் கால்நடைகள் காணப்படுகின்றன.
கால்நடைகளுக்கு தேவையான உணவு பற்றாக்குறையை இந்த உயிரிழப்புக்கு காரணமாகும். அது தொடர்பில் நான் பிரதம செயலாளருடன் கதைத்தேன் எங்களுக்கு எழுபது ஆயிரம் கால்நடைகள் தேவையான இடத்தில் வடக்கு மாகாணத்தில் 4 லட்சம் கால்நடைகள் காணப்படுகின்றன.
இந்த கால்நடைகளை நாங்கள் எவ்வாறாயினும் பராமரித்தே ஆக வேண்டும்.நேற்றைய சம்பவமானது மிகவும் ஒரு துன்பியலான சம்பவம் இது மிகவும் முக்கியமான விஷயம்.இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளருடனும் மற்றும் வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரியுடன் சம்பந்தமாக கலந்துரையாடி உள்ளேன்.
கிளிநொச்சி,முல்லைத்தீவு பகுதிகளில் இது அதிகளவில் இடம்பெற்றுள்ளது.இதற்கு கட்டாயமாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.