ஆசிரியர்களுக்கு ஆபத்தாக மாறிய சேலை: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆசிரியர்களின் ஆடை தொடர்பான விடயம் சமகாலத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்கள் கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய ஆடை அணிவது தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பான் பல்கலைகழகத்தின் கலாநிதிபட்ட ஆய்விற்காக லசினி ஜெயசூரிய என்பவர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய ஆடை அணிவதற்காக ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தின் 15 வீதத்தினை செலவிடுகின்றனர் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை பாடசாலைகளிற்கு அணிவதற்கான ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துகின்றனர்.
ஆசிரியர்கள் சேலை அணியவேண்டும் என்ற கட்டாயம் காரணமாக அவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் எவ்வாறு பாதிக்கின்றது என்பதும் ஆய்வில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் மூலம்,சேலை கற்பித்தல் நடவடிக்கைகளை பாதிக்கின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் சேலை அணிவதனால் ஆசிரியர்களில் 30 வீதமானவர்கள் விபத்துக்களை எதிர்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
புகையிரதங்கள் போன்றவற்றில் பயணிக்கும்போது இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பான விதிமுறைகள் பெண்களிற்கு எதிரான பாரபட்சத்தினை கொண்டுள்ளதாகவும் ஆண்களிற்கு மேற்கத்தைய பாணியில் ஆடை அணிவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.