சீனாவின் காய் நகர்த்தல்: பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

சீனாவின் காய் நகர்த்தல்: பிரித்தானியாவிற்கு ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

சீனா தனது விமானப்படைக்கு பயிற்சி வழங்க பிரித்தானியாவில் உள்ள ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்களை பணியமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாட்டின் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களை பணிக்கு அமர்த்தியுள்ளதன் மூலம் சீனா, அமெரிக்காவுடனான மோதலுக்கு தயாராகிறதா, என்கிற கேள்வியை எழுப்புவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர்தான் தைவான் விவகாரத்தில் சீனா தனது விமானப்படைகளை கொண்டு அதிரடியான போர் பயிற்சிகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2019 முதல் பிரித்தானியாவில் முன்னாள் விமானப்படை வீரர்களை சீனா பணியமர்த்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ள வீரர்கள், அதிநவீன போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது டைபூன்ஸ், ஜாகுவார்ஸ், ஹாரியர்ஸ் மற்றும் டொர்னாடோஸ் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களை வீரர்கள் இயக்கியுள்ளனர்.

இந்த வகை விமானங்கள் அனைத்துமே ஒலியை விட வேகமாக பறக்கக்கூடியவை. அதேபோல இவர்களை பணியமர்த்துவதன் மூலம் பிரித்தானிய விமானப்படையின் இரகசியங்களை பெறுவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இவ்வாறு பணியமர்த்தப்படும் வீரர்கள் நேடியாக சீனாவுக்கு சென்று பயிற்சி கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மாறாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில் சீன வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தால் போதுமானது. இவ்வாறு பயிற்சி கொடுக்க ரூ.2.2 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான நிலை சமீப ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளன. பிரித்தானியாவின் உளவுத்துறை நிறுவனமான GCHQ இன் தலைவர் ஜெர்மி ஃப்ளெமிங், சீன தொழில்நுட்பம் பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு பெரும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் பிரித்தானிய வீரர்கள் மட்டுமல்லாது ஆவுஸ்திரேலியாவின் வீரர்களும் அடங்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது போன்ற பணிகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்று இரு நாடுகளும் தங்கள் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இவ்வாறு அறிவுறுத்தல்களை மீறி யாரெல்லாம் சீன வீரர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்களோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This