அதீத நினைவுத் திறன் வரமா.. சாபமா?

சிலருக்கு அதீத நினைவாற்றல் அமையப்பெற்று இருக்கும். சிலருக்கு அதீத ஞாபக மறதி அடிக்கடி ஏற்படும். இந்த இருவரில் யார் கொடுத்துவைத்தவர் எனக் கேட்டால் பலர் நினைவாற்றல் அதிகம் கொண்டர்தானே என சந்தேகத்துக்கிடமின்றி கூறுவர். ஆனால், ஞாபக மறதி கொண்டவர்களே நிம்மதியாக வாழ்கின்றனர் என்கின்றனர் உளவியல் விஞ்ஞானிகள். எப்படி எனக் கேட்கிறீர்களா? மேலே படியுங்கள்.
‘மறதி போன்ற ஓர் மாமருந்து கிடையாது’ என நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். ஒரு விஷயம் நடந்து முடிந்த சில மணிநேரங்களில் அதிலிருந்து வெளியே வந்து அடுத்து வேலையைப் பார்க்கச் செல்லுவோர் நிம்மதியாக வாழ்கின்றனர். ஆனால் அதீத நினைவாற்றல் கொண்ட சிலருக்கு நமது மூளை நியூரான்கள் பல சமயங்களில் தொல்லையை ஏற்படுத்தும்.
அவர்கள் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும்போதோ அல்லது அலுவலக வேலை செய்துகொண்டு இருக்கும்போதோ அல்லது மனைவியுடன் காதலைப் பகிர்ந்துகொண்டு இருக்கும்போது திடீரென பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்று அனைவரும் மறந்துபோன ஒரு விஷயம், அவர்களது மூளை நியூரான்களால் தோண்டி எடுக்கப்படும்.
அவர்கள் மறக்க நினைக்கும் அந்த கெட்ட சம்பவம் திரைப்படம்போல அப்படியே அவர்களது மனதில் ஓடும். மூளையின் செரிபெல்லம் பகுதியில் இந்த பழைய நினைவுப் படங்கள் பதிவாகி இருக்கும். அதீத நினைவுத் திறன் கொண்டவர்களுக்கு அவர்கள் எதிர்பாரா சமயத்தில் இதுபோல தன்னிச்சையாக பழைய நினைவுகள் மனதில் படமாக ஓடும்.
இந்தப் பழைய நிகழ்வைப் பற்றி அந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட யாரிடமாவது இவர்கள் சொன்னால்கூட ‘நானே அந்த நிகழ்வை மறந்துவிட்டேனே..! இன்னுமா அதை நீ நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என ஆச்சர்யமாகக் கேட்பர். இதுபோல அதீத நினைவுத் திறன் கொண்டவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்..!