அல்ஹைதா ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் இலங்கையருக்கு உயிர்த்தஞாயிறுதாக்குதலில் தொடர்பா! விசாரணைகள் தீவிரம்

அல்ஹைதாவுடன் தொடர்புகளை பேணியவர் என சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகளால் தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கை வர்த்தகர் முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசாருக்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளதா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பாரிய வலையமைப்புடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணையை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தகவல்களில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் பேருவளையை சேர்ந்த நிசார் அல்ஹைதாவை சேர்ந்த அஹமட் தலிப்புடன் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்தார் என குற்றம்சாட்டி அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்து பிரிவு அவருக்கு தடைவிதித்தது.
இதேவேளை அல்ஹைதாவை சேர்ந்தவரான அஹமட் லுக்மான் தலிப்( இவரும் தடைப்பட்டியலில் உள்ளவர்) முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசாரின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் போது அல்ஹைதாவை சேர்ந்த நபர் நிட்டம்புவை சேர்ந்த கலேலிய பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் தனது பிள்ளைகளுடன் பல வருடங்களிற்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்று அவுஸ்திரேலிய பிரஜையானார் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.