எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை?

எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை?

எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இறுதியாக இருந்த அமைச்சரவையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறிய மாற்றங்களுடன் தற்காலிகமாக மாற்றியமைத்திருந்தார்.

நிரந்தர அமைச்சரவையை நியமிக்க திகதிகள் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் பொதுஜன பெரமுனவுடன் இணக்கத்தை ஏற்படுத்த முடியாத காரணத்தினால், நிரந்தர அமைச்சரவையை நியமிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது.

குறிப்பாக பொதுஜன பெரமுன தரப்பில் அமைச்சு பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமையும் இதற்கான பிரதான காரணமாக சொல்லப்பட்டது.

இது தொடர்பாக ஜனாதிபதியிடம் சில முறை மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி தனது தீர்மானத்தை மாற்றிக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இறுதியாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இணங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த வார இறுதியில் எகிப்துக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

அங்கிருந்து நாடு திரும்பியதும் புதிய அமைச்சரவை நியமிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS