நிர்க்கதியான பிரித்தானிய மக்கள்..! வரிகள் உயர்த்தப்படும் என பிரதமர் அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவின் நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோர் இன்று அதிரடியாக பிரதமர் லிஸ் ட்ரஸினால் பதவி நீக்கப்பட்ட நிலையில் புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் பகிரங்கப்படுத்தபட்ட வரவுசெலவுத்திட்டத்தில் குறைக்கப்பட்ட வரிகள் யாவும் மீண்டும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்களும் பிரதமாரல் வெளியிடப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் இந்த ஆண்டில் மாத்திரம் மூன்று நிதியமைச்சர்கள் குறகிய காலத்தில் பதவிவகித்த நிலையில் இப்போது நான்காவது நிதியமைச்சராக ஜெரமி ஹன்ட் இன்று மாலை நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியான அறிவிப்பு
இன்று அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் பிரதமர் லிஸ் ட்ரஸ்சை, சந்தித்திருந்த நிலையில், பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த மாற்றங்களை அடுத்து ஊடக மாநாடு ஒன்றை நடத்திய பிரதமர் லிஸ் ட்ரஸ் தான் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த மாதம் பகிரங்கப்படுத்தபட்ட வரவுசெலவுத்திட்டத்தில் குறைக்கப்பட்ட வரிகள் யாவும் மீண்டும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்களும் பிரதமாரல் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாட்டுக்கு 18 பில்லியன் பவுண்ஸ் வரியாக கிட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் அண்மைய பொருளாதார வீழ்ச்சியால் நிதி அமைச்சர் ஆறு வாரங்களுக்குள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியவராக ஜெரமி ஹன்ட் நியமிக்கபட்டுள்ளார்.
பொருளாதாரத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
பிரதமர் லிஸ் ட்ரஸ், தனது பொருளாதாரத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்களே வலியுறுத்திவந்த நிலையில், இந்த அதிரடி மாற்றங்கள் இன்று பிற்பகலில் நடந்துள்ளன.
முன்னதாக சர்வதேச நிதி அமைச்சர்களின் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா பயணமாகியிருந்த முன்னாள் நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் இன்று இடைநடுவில் நாடு திரும்ப வைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சர் பதவி நீக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர், சேர் எட்வேர்ட் டேவி, கென்சவேட்டிவ் கட்சியின் பொறுப்பற்ற தவறான நிர்வாகம், பொருளாதாரத்திற்கு மரண அடியாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மக்கள் சோர்வடைந்துள்ள அதேவேளை ஆத்திரமும் எதிர்காலம் பற்றிய கவலையையும் கொண்டுள்ளார்கள் எனக் கூறியுள்ள சேர் எட்வேர்ட் டேவி, லிஸ் ட்ரஸ் பொருளாதாரத்தை உடைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை பிரித்தானியா அனுபவித்துவரும் பொருளாதார குழப்பங்கள் குறித்து கென்சவேட்டிவ் கட்சி வெட்கி தலைகுனிய வேண்டும் என முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் எட்வேர்ட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.