பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு யாழ் மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது!

பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு மாநகர சபை எச்சரிக்கை விடுத்து உள்ளது
யாழ் மாநகர சபையை பொறுத்தவரை அனைத்து வீதிகளிலும் தினசரி குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வந்து செல்கின்றன. தூய்மை பணியாளர்கள் அந்தந்த வீதிகளில் குப்பைகளை சேகரித்தும் வருகிறார்கள். ஆனால், பலர் குப்பை வாகனங்களில் கழிவுகளை போடாமல், பொட்டலமாக கட்டி பொது இடங்களில் வீசி வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளனர்.
இதுபோன்ற இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. யாராவது பொது இடங்களில் குப்பை போட்டால் உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
வீதிகள் தோறும் வீடு வீடாக தூய்மை பணியாளர்கள் வரும்போது அவர்களிடம் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். ஏதேனும் வீதிகளுக்கு குப்பை வண்டி வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். அதை விடுத்து அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது என யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்தார்.